தமிழ்நாடு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாயின
![election day - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/election-day.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 7 மணியோடு நிறைவு பெற்றுவிட்டது. இந்த முறை தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எப்போதும் போல இந்த முறையும் தமிழகத்தில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவு நடந்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சில சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த முறை நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. வழக்கம் போல சென்னையில் வாக்கு அளித்தவர்கள் விகிதம் குறைவாகவே உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு மாநிலத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகள் மூலம் நடந்தது. கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தற்போது தமிழகத்தில் வீரியமாக பரவி வருவதால், வாக்களிக்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்திருந்தது.
வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வந்த அனைவருக்கும் ஒரு முறை பயன்படுத்தும் கையுறையும், கிருமி நாசினி சானிடைசரும் வழங்கப்பட்டது. அதேபோல சமூக இடைவெளியை கடைபிடித்து தான் வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டன. இன்றைய வாக்குப் பதிவு எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.