தமிழ்நாடு
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்: புலம்பும் அன்புமணி!
![Anbumani - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/05/Anbumani.jpg)
தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மாலை 7 மணி வரை இந்த வாக்குப் பதிவானது நடக்கும். இந்நிலையில் திண்டிவனத்தில் தனது வாக்கை குடும்பத்துடன் செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கருத்துக் கணிப்புகள் பற்றி கறார் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அவர், ‘தற்போ தமி்ழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கு தமிழகம் வெற்றி நடை போட எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும். கருத்துக் கணிப்புகள் தவறான முன்னுதாரணம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கருத்துக் கணிப்பு வெளியிடக்கூடாது.
தமிழ்நாட்டின் 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் எனது வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். எனது குடும்பத்தினரும் என்னுடன் வாக்களித்தனர்.(1/3) pic.twitter.com/eFNajuCpyV
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 6, 2021
தமிழகத்தில் 6.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 30 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இது 234 தொகுதிகளில் கணக்கிட்டால் 130, 140 பேரிடம் கருத்து கேட்கப்படுகிறது. இது விஞ்ஞானபூர்வமானது இல்லை. கருத்துக் கேட்கப்படும் நபர்கள் யார் யார் எனவும் வெளியிடுவதில்லை. அவர்கள் விவசாயிகளா, அரசு ஊழியர்களா? முன்னேறியவர்களா? பின் தங்கியவர்களா? என எதுவுமே தெரியவில்லை.
ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தற்போது அரசியல் கட்சிகள், கட்சியைச் சார்ந்தவர்கள் ஊடகம் வைத்துக்கொண்டு தங்களுக்கேற்பக் கருத்துகளை உருவாக்கி வருகிறார்கள். 2001 தேர்தல் முதல் கருத்துக் கணிப்புகள் சரியாக வருவதில்லை’ என்று புலம்பியுள்ளார்.
இதுவரை அனைத்துத் தரப்பு ஊடகங்களும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகள், திமுக கூட்டணியே தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக திமுக, தனிப் பெரும்பான்மை பெறும் எனவும் சொல்லப்படுகிறது.