தமிழ்நாடு
கரூர் அருகே பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஆங்காங்கே இயந்திர கோளாறு
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வாக்குச்சாவடி எண் 251 சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் சின்னத்தில் பட்டன் இல்லை என்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்று வாக்குப்பதிவு எந்திரம் வந்த பின்னரே இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. மதுராந்தகம் மாரிபுத்தூர் வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. மதுரை மேற்கு தொகுதி மருதுபாண்டியர் நகரில் வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை.
கோவை அன்னூர் அருகே எல்லப்பாளையம் கிராமத்தில் தற்போது வரை வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை என்றும் இங்கும் இயந்திரக்கோளாறு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.