இந்தியா
ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: நிலைமை மோசமாகும் மகாராஷ்டிரா!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று நாக்பூர். இந்த நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 5000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாக்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது இதனால் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்
எனினும் இது நடக்காமல் தடுக்க தீவிர முயற்சி செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டும் என்றும், படுக்கை கிடைக்கும் வரை அவர்களை காத்திருக்க வைக்க முடியாது என்றும் அவர்களது ஆக்சிஜன் அளவு கடுமையாக பாதிக்கும் என்றும் அதனால் வேறு வழியின்றி ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து ஆக்சிஜனி செலுத்தி வருவதாகவும், ஆனால் 15 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு படுக்கையை தயார் ஆனதும் அவர்களை தனி படுக்கைக்கு மாற்றி விடுவோம் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.