இந்தியா
ஏப்ரல் 30 வரை தியேட்டர்களை மூட வேண்டும்: மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவால் பாலிவுட் அதிர்ச்சி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் அடுத்தடுத்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது அதிரடியாக திரையரங்குகளை மூட வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து திரையரங்குகளையும் மூட வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் பல ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் திடீரென இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னரும் இதே நிலை நீடித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் பாலிவுட் திரையுலகினர் இடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் விரைவில் திரையரங்குகள் மூடப்படும் அல்லது 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறப்படுவதால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.