தமிழ்நாடு
கருணாநிதியை பின்பற்றி அந்த முடிவை எடுத்தேன்; முதல்வர் பழனிசாமி பேட்டி
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என தான் கூறியதற்கு காரணம் கருணாநிதியை பின்பற்றி எடுத்த முடிவுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் சமாதி கட்ட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் முதல்வர் பழனிசாமி அதற்கு அனுமதி மறுத்தார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கருணாநிதி சமாதியை மெரினாவில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர மறுத்தது ஏன் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தற்போது விளக்கமளித்துள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த போது அவர் அப்போதைய முதலமைச்சர் இல்லை என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார். அதேபோல் எம்ஜிஆரின் மனைவி ஜானகி எம்ஜிஆர் இறந்த போதும் முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடமில்லை என கருணாநிதி கூறினார். அவருடைய வழியை பின்பற்றி தான் கருணாநிதி முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தேன் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே தான் கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அதை ஸ்டாலின் பெற மறுத்து விட்டு நீதிமன்றம் சென்றதாகவும் நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். காமராஜர், ஜானகி ஆகியோர் முன்னாள் முதல்வர்கள் என்பதால் மெரினாவில் இடம் கொடுக்க கருணாநிதி மறுத்ததை பின்பற்றியே கருணாநிதிக்கும் இடம் கொடுக்க தான் மறுத்ததாக பழனிச்சாமி கூறியுள்ளார்.