இந்தியா
ஒரு லட்சத்தை நெருங்குகிறது இந்தியாவின் ஒருநாள் கொரோனா பரவல்!
தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய மாநில அரசுகள் பெரும் கவலையில் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கடந்த ஆண்டை போலவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தக்கூடிய நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் உள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக என் 89,129 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 714 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் 44,202 பேர் குணமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 7.30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 6,58,909 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.