தமிழ்நாடு
வருமான வரிசோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த பணமும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தாமரை வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு நீலாங்கரையில் உள்ளது. அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை முதல் சோதனை ஈடுபட்டனர். செந்தாமரை, அவருடைய கணவரின் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணி நேரம் நீடித்த வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவு பெற்றது. வருமான வரித்துறை சோதனை குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் குடும்ப செலவுக்காக ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும், துருவித் துருவி சோதனை செய்ததில் வேறு எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தந்து விட்டு அதிகாரிகள் சென்றதாக தெரிவித்தார்.
மாசு அற்றவர்களாக அரசிலிருந்து இருக்கிறோம் என்று கூறிய அவர், மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுக அழுத்தம் காரணமாக இந்த வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.