தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி: பூரணகும்ப மரியாதை
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக பிரபலங்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று அமித்ஷா தமிழகம் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
மேற்கு வங்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்த பிரதமர் மோடி நேற்றிரவு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். வேஷ்டி சட்டையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதன்பின் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரை சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த சிற்பங்களை பார்வையிட்டு ரசித்தார். ஒருசில சிற்பங்கள் குறித்த ஒரு சில தகவல்களையும் அவர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார். அங்கு பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார் என்பதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்புகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.