தமிழ்நாடு
புரிதல் இல்லாமல் சிலர் கூறுகின்றனர்: இட ஒதுக்கீடு நிரந்தரமில்லை என்ற கருத்துக்கு ராமதாஸ் பதிலடி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமானது இல்லை என்று சிலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது/ இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை பாமகவினர் கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என்றும் தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பின்னரே வன்னியர் இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார் துணை முதல்வரின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது என்று சிலர் சமூக நீதி குறித்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனர். என்னிடம் முதல்வர் நேரடியாக தொலைபேசி மூலம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரமானது என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். துணை முதல்வருக்கு எதிரான ஒரு கருத்தை டாக்டர் ராம்தாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.