கிரிக்கெட்
INDvENG- வெற்றிக்கு வித்திட்ட அந்த கடைசி ஓவர்; நடராஜனை கட்டித்தழுவி நன்றி தெரிவித்த கோலி! #ViralPhoto
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா சார்பில் ரிஷப் பன்ட், அதிகபட்சமாக 78 ரன்கள் குவித்தார். தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அரைசதங்கள் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து கடைசி பந்து வரை வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி கண்டது. அந்த அணி சார்பில் ஆல் ரவுண்டர் சாம் கரன், அதிகபட்சமாக 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷ்ராதுல் தாக்கூர். அதே நேரத்தில் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசியது தமிழகத்தின் தங்க மகன் நடராஜன்.
அவரிடம் கடைசி ஓவருக்கான பொறுப்பு கொடுக்கப்பட்ட போது சாம் கரன் ஃபுல் ஃபார்மில் ஸ்டிரைக்கில் இருந்தார். 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. ஆனால் மொத்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த நடராஜன், இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இதை உணர்ந்த கேப்டன் விராட் கோலி, நடராஜனை கட்டித் தழுவி பாராட்டினார். இது குறித்தான புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.