தமிழ்நாடு
மோடி, அமித்ஷாவின் காலில் விழுந்துக் கிடக்கும் பழனிசாமி: ராகுல் காந்தி விமர்சனம்
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ராகுல்காந்தி தற்போது வேளச்சேரி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியபோது ’எந்த மானமுள்ள தமிழனும் இன்னொருவர் காலடியில் விழுந்து கிடக்க மாட்டார் என்றும், ஆனால் மிகப்பெரிய பாரம்பரிய இனத்தின் முதல்வராக இருக்கும் பழனிச்சாமி, மோடி மற்றும் அமித்ஷாவின் காலில் விழுந்து கிடப்பதை பார்க்க எனக்கே கோபமாக வருகிறது என்றும் கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதரிகள் என்று கூறிய ராகுல் காந்தி, பாஜகவில் சம மரியாதை, உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்று மாலை சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்பதும் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.