தமிழ்நாடு
நடிகர் சிவக்குமாரின் ஓட்டு இந்த கட்சிக்குத் தான்; இந்த வேட்பாளருக்குத் தான்!
பழம்பெறும் நடிகரும் பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஓட்டு யாருக்கு என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் முறையாக களம் காண்கிறார் பிரபல மருத்துவர் எழிலன். கட்சி பேதங்களைத் தாண்டி எழிலன், ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று பலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் செய்தார்.
அதேபோல சமூக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி உள்ளிட்டோரும் எழிலனுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆயிரம் விளக்குப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வசிக்கும் நடிகர் சிவக்குமாரின் இல்லத்துக்குச் சென்று எழிலன் சார்பில், திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நடிகர் சிவக்குமாரும் தனது ஆதரவை எழிலனுக்குத் தருவதாக கூறியுள்ளார். இது பற்றிய தகவலை எழிலன் தரப்பு உறுதி செய்துள்ளது.