தமிழ்நாடு
தமிழகத்தில் 10 நாளில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று – எச்சரிக்கும் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுத் தரப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் கட்டாயப்படுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணியாதவர்களுக்கு அரசு தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் மாநில தொற்று விவரம் குறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்தில் முறையான கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாத காரணத்தினால் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 100 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டால் அதில் ஒருவருக்கு மட்டும் தான் பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது நூறு பேரில் 2 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. மக்கள் அனைவரும் தொய்வடையாமல் தொடர்ந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.