தமிழ்நாடு
மேலும் ஒரு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு கொரோனா: கமலுக்கும் பரவியதா?
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிகவேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் இரு மடங்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு சில வேட்பாளர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபு என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டில் இருந்து கொண்டே டிஜிட்டலில் பிரசாரம் செய்து வருகிறார்,
இந்த நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு வேட்பாளருக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளது. சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் உதவியாளராக இருந்தவருமான பொன்ராஜ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் கமல்ஹாசனுடன் பொன்ராஜ் உடன் பங்கேற்றிருந்தார் என்பதால் கமல்ஹாசனுக்கும் கொரோனா தொற்று பரவியதா என பரிசோதனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொன்ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அன்பு நண்பர்களே, நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன். ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, YouTube மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
ZOOM MEETING மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்.
இவ்வாறு பொன்ராஜ் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.