தமிழ்நாடு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல்பாஸ்? துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து ஏற்கனவே 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதை அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல்பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நேற்று தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ’12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் அந்த பகுதியில் உள்ள சீலையம்பட்டி என்ற பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியபோது, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக தமிழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறுவது சந்தேகமே என்று தெரிகிறது.