தமிழ்நாடு
முக்கிய தொகுதியில் வேட்பாளரை நிறுத்த மறந்துவிட்ட காங்கிரஸ்: சுயேட்சைக்கு ஆதரவா?
தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்த நிலையில் முக்கிய தொகுதி ஒன்றில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி மறந்து விட்டதாக தெரிய வந்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் தொகுதிகளில் ஒன்று ஏனாம் தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்றுடன் மனுதாக்கல் நேரமும் முடிவடைந்துவிட்டது. தேர்தல் பரபரப்பில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏனாம் தொகுதி வேட்பாளரை அறிவிக்க மறந்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் யாரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் ஒருவருக்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மொத்தமே 30 தொகுதிகள் அடங்கிய புதுவை மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில் அந்த 16 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்க மறந்துவிட்டது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக அம்மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர்.