இந்தியா
அவசர வழக்காக விசாரிக்க முடியாது: ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது என அந்த பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து தமிழக அரசு அந்த ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனம் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் வரும் ஆகஸ்டு மாதம் தான் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணையே இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து தான் நடைபெறும் என்றும், வழக்கு எப்போது முடியும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் இப்போதைக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.