இந்தியா
25 ஆயிரம் பேர் பாதிப்பு, 54 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 25,833 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 13 நாட்களில் கொரோனா வைரஸ் 127 சதவிகிம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மும்பையில் இன்று ஒரே நாளில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புனே, நாக்பூர், நாசிக் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.