தமிழ்நாடு
‘இந்தியிலயா வேட்பாளர் அறிவிப்பு… ஒரு இடத்தில கூட அவன ஜெயிக்க விடக்கூடாது..!’- பாஜகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பை பாஜகவின் தலைமை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட்டது. தமிழில் வேட்பாளர்கள் பெயரை அறிவிக்காத காரணத்தினால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் புவனகிரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’50 ஆயிரம் ஆண்டுகள் மூத்த மொழி தமிழ். வெறும் 400 ஆண்டுகள் பழைய மொழி இந்தி. அப்படிப்பட்ட இந்தியை தேசிய மொழியாக்க பாஜக துடிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் வேட்பாளர்கள் பட்டியலைக் கூட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுகிறது. இந்த ஒரே காரணத்திற்காகவே பாஜகவை அனைத்து இடங்களிலும் நாம் வீழ்த்த வேண்டும்’ என்று கொதிப்புடன் பேசினார்.