இந்தியா
‘கொரோனாவின் இரண்டாம் அலை’- முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி!
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. காணொலி மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
நாட்டில் இப்போது பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்கவில்லை என்றால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும். தற்போது உருவாகி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும்.
கொரோனாவை எதிர்த்து நாம் போராடியதன் மூலம் பெற்ற தன்னம்பிக்கை, அதீத நம்பிக்கையாக மாறிவிடக் கூடாது. நம் வெற்றி என்பது தவறான பாதையில் வழிநடத்தும்படி செய்துவிடக் கூடாது. கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் மக்கள் பீதியடையாமலும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இன்று மட்டும் நாட்டில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்து மிக அதிக ஒரு நாள் பாதிப்பு ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கேரளாவில் 1,970 பேருக்கு தொறுற உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.