தமிழ்நாடு
‘இரட்டை இலை’ கதை தெரியுமா?- வரலாற்றைச் சொல்லி வாக்கு சேகரித்த கமல்
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன் தினம், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் கமல். இதைத் தொடர்ந்து அவர் அந்த தொகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் பொதுக் கூட்டத்தில், ‘கணக்குக் கேட்டு அரசியலுக்கு வந்தவர் தான் எம்.ஜி.ஆர். அப்படி வந்த அவர் மூன்றாவது அணியாகத் தான் அன்று இருந்தார். இன்று என்னிடம் கதை சொல்கிறார்கள், ‘மூன்றாவது அணி வெல்ல வாய்ப்பில்லை’ என்று. எம்.ஜி.ஆரே அரசியலுக்கு வந்தபோது மூன்றாவது அணிதான்.
அவர் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, இன்றைக்குப் பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரையும் வனவாசம் போக வைத்தார். அவர் போட்ட இரட்டை இலைகளில் தான் இன்று இருப்போர் விருந்து சாப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபோது கலைஞர் சொன்னாராம், ‘இது நாங்கள் சாப்பிட்ட இலைதான். அதில் தான் அவர்கள் சாப்பிடப் போகிறார்கள்’ என்று. அதற்கு எம்.ஜி.ஆர், ‘ஐயா, நாங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டோம். நீங்கள் இலையில் என்னென்ன சாப்பிட்டீர்கள் எனப் பார்க்கத் தான் வந்துள்ளோம்’ என பதிலடி கொடுத்தார்’ எனக கலகலப்புடன் பேசினார். கமலின் பேச்சுக்கு மக்கள் ஆரவாரத்துடன் கையொலி எழுப்பினார்கள்.