தமிழ்நாடு
தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி ஆய்வு.!
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி சோதனையை நடத்தியுள்ளது.
அண்மையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ராஜராஜசோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்து அரசியான லோகமாதேவி சிலைகள் திருட்டு போயின.
ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு படை, தீவிர தேடலுக்கு பின் சிலைகளை கண்டுபிடித்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதனை தொடர்ந்து கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என மொத்தம் 55-க்கும் மேற்பட்டோருடன் திடீர் ஆய்வை துவங்கினர்.
இதையடுத்து 2 நாளாக தொடர்ந்து கோவில் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின் போது பெரிய கோவிலில் உள்ள பழைய ராஜராஜ சோழன் சிலையின் தொன்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.