தமிழ்நாடு
சபரிமலை விவகாரம்: ரஜினி என்ன சொல்ல வருகிறார்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்ல அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சபரிமலைக்கு சில பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு வேடிக்கையாக செல்ல முயன்றனர். இதனால் அவர்களை தடுக்க இந்து ஆர்வலர்கள் இறங்க அங்கு கலவரம் மூண்டது. இதனை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரபல நடிகரும், ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தவருமான ரஜினிகாந்திடம் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், பெண்களுக்கு அனைத்து விவகாரங்களிலும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், கோயில் என்று கூறும்போது ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும். காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் ஐதீகம் இருக்கும். அதில் தலையிடக்கூடாது என்பது எனது கருத்து. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதேநேரத்தில் மத சம்பந்தப்பட்ட விஷயங்கள், சடங்குகளை பார்த்து செய்ய வேண்டும் என்றார்.