தமிழ்நாடு
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் முதல்வர் பழனிசாமி!
மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்று வெளிவரும் செய்திகளை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் கூட திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பு முகாமில் முதல்வர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் அவர்களே வழிகாட்டியாக அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அதிமுகவினர் பாராட்டி வருகின்றனர்.
மேலும் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தமிழக முதல்வர் பேசியபோது தமிழகத்தில் இதுவரை 11.2 லட்சம் பேருக்கு ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் உள்ள 2652 அரசு மருத்துவமனைகளில் 924 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.