தமிழ்நாடு
‘மீண்டும் முதல்வரானால் எடப்பாடியார் நல்லாட்சி கொடுக்க வாய்ப்பு..!’- சீமானின் ‘பகீர்’ பேட்டி
எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அஇஅதிமுக, தான் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்தான பட்டியலையும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ள பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலை அதிமுக தரப்பின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிசாமி மீது அதிக விமர்சனங்களே எழுந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டிப் பேட்டி கொடுத்துள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்தப் பேட்டியில் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசுகையில், ‘தைப்பூசத்துக்குப் பொது விடுமுறை அறிவித்தது, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு சிறை விடுப்பு கொடுத்தது உள்ளிட்ட காரியங்களை முதல்வராக இருந்து பழனிசாமி செய்தார். இதுவெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள் தான். அவரால் அந்தப் பதவியில் இருந்து என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார்.
ஒரு வேளை அவர் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தால் நல்லாட்சி கொடுக்க வாய்ப்புள்ளது’ என்று பகீர் கிளப்பும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக கட்சிகளை சீமான் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதிமுக மீது எப்போதும் ஒருவித ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் உள்ளன. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அவர் பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.