தமிழ்நாடு
அதிமுக வேட்பாளர் பட்டியல்: அதிருப்தியால் ஏற்பட்ட விளைவுகள்!
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பதும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியல் பெரும்பாலானவர்களை திருப்தி அடைய செய்திருந்தாலும் ஒரு சிலரை அதிருப்தி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதியை பாமகவுக்கு வழங்கியதை அடுத்து அதிமுகவினர் அந்த பகுதியில் சாலை மறியல் செய்து வருவதால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாசரேத் பேட்டையில் அதிமுகவினர் நடத்திய இந்த சாலை மறியலை அடுத்து, பூந்தமல்லி தொகுதி திரும்ப பெறப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடிய தனக்கு சீட் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், தனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் காரணம் என்றும் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் குற்றம்சாட்டியுள்ளார். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு சில அதிருப்திகள் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதேபோல் வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியில் இருந்தும் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக வைத்தி என்பவர் அறிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் பகுதியில் பாலு களமிறக்கப்பட்ட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகியதாக கூறப்படுகிறது.