கிரிக்கெட்
ரிஷப் பன்ட் செஞ்சத எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாது: ரவி சாஸ்திரி பாராட்டுக்கு காரணம் என்ன?
![rishab-pant444 - Bhoomitoday Fans celebrating rishabh pant's comeback](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/rishab-pant444.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த சாதனைகளை இன்னொருவரால் முறியடிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லி புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் புரிந்த கையோடு, இங்கிலாந்துக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த இரு தொடர்களையும் இந்தியா, வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பன்ட். இரு தொடர்களில் பன்ட் சதம் விளாசிய போட்டிகளில், அவர் அதிரடி பேட்டிங் காரணமாக இந்தியா வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்துப் பேசியுள்ள ரவி சாஸ்திரி, ‘ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் ரிஷப் பன்ட் மோசமான ஃபார்மால் அவதிப்பட்டார். உடல் எடையும் அதிகரித்துக் காணப்பட்டார். ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் உடல் எடையைக் குறைத்தார். அதைத் தொடர்ந்து அவரின் சிறப்பான ஆட்டத்தை உலகமே வியந்து பார்த்தது.
பன்ட், இயற்கையிலேயே மிகுந்த திறமை வாய்ந்த வீரர். அவர் கடந்த இரண்டு மாதங்களில் சாதித்தவற்றை எவராலும் அவர்கள் வாழ்க்கை முழுவதிலும் கூட செய்ய முடியாது’ என்று புகழ்ந்துள்ளார்.