தமிழ்நாடு
கமல்ஹாசனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது: ப.சிதம்பரம்
![P Chidambaram - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/P-Chidambaram.jpg)
மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும் அப்படி ஒரு சூழ்நிலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தமிழகத்தில் அதிமுக, திமுக என 2 பெரிய கட்சிகள் தான் உள்ளது. இந்த இரண்டு கட்சிகள் அமைக்கும் அணிகளுக்கு இடையேதான் போட்டி நடக்கும். மூன்றாவது அணி என்று வந்தால் அவர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளலாமே தவிர, அது தேர்தலைத் தீர்மானிக்கக்கூடிய அணியாக இருக்காது.
இது நண்பர் கமல்ஹாசனுக்கும் பொருந்தும். எல்லோருக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் இரண்டு பெரிய அணிகளுக்கிடையேதான் 1971-ல் இருந்து போட்டி இருந்து வந்துள்ளது. புதிதாக அந்த வரலாற்றை மாற்றி அமைக்கக்கூடிய சூழ்நிலை வந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேட்டி கட்டிய ஒருவர் தான் பிரதமராக வரவேண்டும் என்று ப.சிதம்பரம் குறித்து கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால் தற்போது கமல்ஹாசனுக்கு எதிரான ஒரு கருத்தை ப.சிதம்பரம் கூறியிருப்பதாக கமல் ரசிகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.