தமிழ்நாடு
சசிகலா சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார், வரவேற்கிறேன்: எல்.முருகன்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று இரவு சசிகலா திடீரென அறிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என்றும் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவரது முடிவு ஏமாற்றத்தை தந்தாலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு சசிகலாவின் இந்த முடிவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சசிகலாவின் முடிவை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
திருமதி. சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்.
இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.