தமிழ்நாடு
தேமுதிகவுக்கு அதிமுக கல்தா..!- கழட்டிவிட்ட ஈ.பி.எஸ்; அவசரக் கூட்டம் போட்ட பிரேமலதா
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கழட்டிவிடப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. முன்னதாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் அந்தக் கட்சிக்கும் அதிமுக தரப்பு, சுமார் 20 தொகுதிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி முறிவு குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் தல்ல உடல்நிலையில் இல்லாதது, தொடர்ந்து சரிந்து வரும் வாக்கு சதவீதம் உள்ளிட்ட காரணங்களால் தேமுதிகவின் டிமாண்ட் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அதிமுகவுக்கும், தேமுதிகவை தன்னுடன் அழைத்துச் சென்று கரை சேர்க்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.
இதனால் அடுத்தபடியாக கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணையலாமா அல்லது சசிகலா- டிடிவி தினகர் தலைமையில் மூன்றாவது அணியில் இணையலாமா என்று கணக்குப் போட்டு வருகிறது தேமுதிக தலைமை. எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்தான முடிவு தெரியும்.