தமிழ்நாடு
முடிவுக்கு வந்தது பஸ் ஸ்டிரைக்: நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்த நிலையில் இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு உரிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மூன்று நாட்களாக நீடித்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் நாளை முதல் வழக்கம்போல் பேருந்துகள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.