சினிமா செய்திகள்
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
![Vadivelu-2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Vadivelu-2.jpg)
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கவுள்ள இயக்குநர் ஒருவர் தனது படத்துக்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்கள் மூலம் சினிமாவிலும் குடும்பங்களைக் கவர்ந்தவர் இயக்குநர் திருமுருகன். முதன்முறையாக 1998-ம் ஆண்டு அக்ஷயா என்னும் நாடகத் தொடர் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார் திருமுருகன். அதன் பின்னர் பல தொடர்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார்.
குறிப்பாக இவரது மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன் நிலவு, குலதெய்வம், கல்யாண வீடு ஆகிய தொடர்கள் சன் டிவி-யில் மிகப் பிரபலம். சன் டிவி-யில் சீரியல் இயக்குநர் ஆக இருந்தவர் சினிமாவுக்குச் சென்று இரண்டு படங்கள் மட்டுமே இயக்கினார். அதன் பின்னர் மீண்டு சீரியல் பக்கமே சென்றுவிட்டார்.
இயக்குநர் திருமுருகன் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்குள் மீண்டும் வருகிறார். திருமுருகனின் முதல் 2 படங்களிலுமே வடிவேலுவின் காமெடி முக்கியப் பங்கு வகித்தது. அதனாலே தற்போது தனது புதிய படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் திருமுருகன்.