தமிழ்நாடு
புதுவை காங். எம்.எல்.ஏக்களை மிரட்டினார் அமித்ஷா: குண்டுராவ் குற்றச்சாட்டு!
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் நேரடியாக பேசி உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டினார் என்றும் அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து நேற்று கவர்னரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் விரைவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் கடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும், காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை பாஜக ஒழிக்க முயற்சிக்கிறது என்றும் கூறினார். மேலும் எதிர்வரும் தேர்தலில் பாஜகவை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தினேஷ் குண்டுராவ் அவர்களின் இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது