தமிழ்நாடு
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்: கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா?
![OPS 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/OPS-1.jpg)
தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்களை கவரும் கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுக்களை அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது 10வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்தது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் கிட்டத்தட்ட தற்போது 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதை கண்டித்து திமுக உள்பட எதிர்கட்சிகள் இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ஏற்கனவே விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.