தமிழ்நாடு
பெட்ரோல் விலை ஏன் இப்டி ‘கம்மியா’ ஏறுது தெரியுமா..?- எச்.ராஜா கொடுத்த பலே விளக்கம்
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காலத்தில் 39 ரூபாய் பெட்ரோல் விலை உயர்ந்தது. அப்படிப் பார்த்தால் ஓராண்டுக்கு 4 ரூபாய் அளவுக்குப் பெட்ரோல் விலை அதிகரித்தது.
மோடிஜியிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் போது, பெட்ரோல் விலை 74 ரூபாய். இன்றைக்கு பெட்ரோல் விலை 93 ரூபாய். அதை வைத்துப் பார்த்தால் 7 ஆண்டுகளில் 19 ரூபாய் அளவுக்குப் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. 7 ஆண்டுகளில் 19 ரூபாய் என்பது 2 ரூபாய் 60 பைசா வரும்.
இது சாதாரண பணவீக்கம் மூலம் உயரும் விலை. இதற்கு மோடி அரசை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.
நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது. இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.