தமிழ்நாடு
கறிவேப்பிலையின் விலை ரூ.100: அதிர்ச்சியில் பொதுமக்கள்
பொதுமக்கள் காய்கறி வாங்கும்போது இலவசமாகவே கருவேப்பிலையை காய்கறி கடையில் இருந்து வாங்கி வருவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கருவேப்பிலை விலை ரூபாய் 100 என்ற விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து காய்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெங்காயம் மீண்டும் ஐம்பது ரூபாயைத் தாண்டிவிட்டது என்பதும் விரைவில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அனைத்து காய்கறிகளும் விலை ஏறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலவசமாக காய்கறி கடைக்காரர்கள் வழங்கிக்கொண்டிருந்த கருவேப்பிலை கிலோ ரூபாய் 100 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் கருவேப்பிலை விளைச்சல் குறைவு ஆகியவை காரணமாக கருவேப்பிலையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதேபோல் கொத்தமல்லி ஒரு கட்டு 30 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை இதே ரீதியில் உயர்ந்து கொண்டே சென்றால் கருவேப்பிலையை கூட இனி கண்ணில் பார்க்க முடியாது என்று நெட்டிசன்கள் கிண்டலாக கூறி வருகின்றனர்.