தமிழ்நாடு
ஆளுனர், துணைநிலை ஆளுனர் அதிகாரம் என்னவென்று எனக்கு தெரியும்: தமிழிசை பேட்டி
புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுவை மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ’ஒரு ஆளுநரின் அதிகாரம் என்னவென்று எனக்கு தெரியும், அதே போல் யூனியன் பிரதேசத்தில் உள்ள துணைநிலை ஆளுநரின் அதிகாரம் என்னவென்று எனக்குத் தெரியும். மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர்களின் அதிகாரம் என்னவென்று எனக்கு தெரியும். எனவே அவரவர் அதிகாரங்கள் பறிபோகாதபடி செயல்பட அனுமதிப்பேன்’ என்று கூறினார்.
மேலும் புதுவை மாநில மக்களை சந்திக்கும் பணியை தொடரும் என்றும் ஆனால் கிரண்பேடி அவர்கள் மாதிரியா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றும் எனக்கு என்று தனி பாணி இருக்கிறது என்றும் அந்த பாணியில் மக்களை நான் தொடர்ந்து சந்திப்பேன் என்றும் கூறினார்.
மேலும் கவர்னர் மாளிகையின் கதவுகளை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் தட்டலாம் என்றும் தங்கள் குறைகளை தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக அவை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.