தமிழ்நாடு
குஷ்புவுக்கு பயந்து தொகுதி மாறுகிறாரா உதயநிதி?
தமிழகத்தில் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதம் முதல் வாரம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று அந்த பகுதியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்த குஷ்பூ அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதும் அந்த தொகுதிக்கு பிரதமர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிடுவதில் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சேப்பாக்கம் தொகுதி 7 முறை திமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதும் கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற தொகுதி என்றாலும் குஷ்புவை எதிர்த்து போட்டியிடுவது ரிஸ்க் என்பதால் துறைமுகம் தொகுதியில் உதயநிதி போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
துறைமுகம் தொகுதியிலும் 10 முறை திமுக வெற்றி பெற்றது என்பதும் கருணாநிதி உள்பட பல முன்னணி திமுக தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குஷ்புவுக்காக உதயநிதி தொகுதி மாறி உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.