தமிழ்நாடு
ஒரு பாட்டில் சரக்குக்கு சண்டையா..?- பகீர் சிசிடிவி வீடியோ; கோவையில் அதிமுக நிர்வாகியால் சலசலப்பு
![ADMK CCTV - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/ADMK-CCTV.jpg)
கோயம்புத்தூரில் ஒரு பாட்டில் மதுபானத்துக்காக அதிமுக ஐடி விங் நிர்வாகி, பார் ஊழியர்களைத் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. இது குறித்தான சிசிடிவி வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
கோவை அருகேயுள்ள மலுமிச்சம்பட்டியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அங்கு பார் வசதியுடன் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் சில நாட்களுக்கு முன்னர் பணி செய்து வரும் ஊழியர்களிடம் மதுபானம் கேட்டுள்ளது ஒரு கும்பல். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் டாஸ்மாக்கில் இருந்த ஊழியர்களுக்கும் மதுபானம் கேட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
ஓசியில் மதுபானம் கொடுக்க மறுத்த பார் ஊழியர்களை தாக்கிய அதிமுக ஐடி.விங் நிர்வாகிகள் #ஓசி_குடி_அதிமுக pic.twitter.com/wJDN79XT6R
— Hindi Theriyathu ???????? PODA❗ (@Tamilandaaaah) February 15, 2021
தொடர்ந்த சண்டையில் ஈடுபட்ட நபர்கள், ‘நாங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?’, ‘எங்க கிட்டயே காசு கேட்குறியா?’ என்றெல்லாம் கேட்டு தகாத வார்த்தைகளில் அங்கிருந்த ஊழியர்களைத் திட்டி தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் பார் ஊழியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இப்படி தாக்குதலில் யார் ஈடுபட்டது என்று விசாரிக்கையில், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஐடி விங் துணைச் செயலாளர் சம்பத் குமார் மற்றும் அவரது நண்பர்களே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து முழுதாக தெரியவில்லை என்றாலும், கோவை பகுதியில் இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.