இந்தியா
21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட தடுப்பூசி போடவில்லை: தமிழக எம்பியின் அதிர்ச்சி தகவல்!
இந்தியா முழுவதும் கொரனோ தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இன்னும் ஒருவருக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்ற விவரம் தமிழக எம்பியின் மூலம் தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்பி இரவிக்குமார் அவர்கள் எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் என்பவர் பதிலளித்தார். இதில் கடந்த 9ஆம் தேதி இந்தியா முழுவதும் 62 லட்சத்து 59 ஆயிரம் பேருக்குக் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் இதில் 59 லட்சத்து 56 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக பதில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்னும் ஒருவருக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுவை மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒரு கோவாக்சின் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.