தமிழ்நாடு
அடுத்த 5 நாட்களில் சசிகலாவின் ஸ்கெட்ச் இதுதான்!!!
ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வந்ததில் இருந்து சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்று தான் தமிழகத்தின் மொத்த அரசியல் தளமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
குறிப்பாக, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. நான்கு ஆண்டு கால சிறைவாசம், கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சசிகலா எப்படியும் அரசியிலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கம்-பேக் கொடுத்துள்ளது பரபரப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
அவர் தன்னுடைய நெருங்கிய தோழியாக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வார், அல்லது சென்னை, இராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவுடன், தான் தங்கியிருந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்துக்குச் செல்வார் என்றெல்லாம் சலசலக்கப்பட்டது.
சசிகலா, அந்த இடங்களுக்குச் சென்று அரசியல் ஆதாயம் அடைந்து விடக் கூடாது என்னும் நோக்கிலேயே, தமிழக அரசு, அனைத்தையும் ‘பராமரிப்புப் பணிக்காக’ முடியுள்ளது. இந்தத் தடைகளை மீறி சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்துக்குள் நுழைந்து, அஞ்சலி செலுத்துவார் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம், சசிகலா, நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக பகீர் தகவலும் சொல்லப்படுகிறது. இதை அதிமுக தரப்பில் இருந்து மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், முற்றிலும் மறுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் இருக்கிறார்.
இவை அனைத்தையும் விட சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு, அதிமுகவை உடைத்த ‘தர்ம யுத்த நாயகன்’ ஓ.பன்னீர்செல்வத்தின் அமைதி, பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது.
இப்படி இருக்க கொரோனா தொற்று குணமடைந்த பின்னரும் அடுத்த 5 நாட்களுக்கு உடல்நலனைக் கருத்தில் கொண்டு சசிகலா, தன்னைத் தனிமைப்படுத்தக் கொள்வார் என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும் அந்த 5 நாட்களில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க காய் நகர்த்தப்படும் என்றும் உள்வட்டாரத் தகவல்.