கிரிக்கெட்
INDvENG – ‘சென்னை பிட்ச் ரொம்ப மோசம்பா’- சர்ச்சையாகும் ஆர்ச்சரின் விமர்சனம்
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியாவை, இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனைப் படைத்தது. இந்நிலையில் நாளை மறுநாள் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தைப் பற்றி, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அவர், ‘ஒரு டெஸ்ட் போட்டியில், 5வது நாளில் மிக மோசமான பிட்ச் எனக்குத் தெரிந்து முதல் போட்டியில் இருந்த சென்னை பிட்ச் ஆகத்தான் இருக்கும். ஆரஞ்சு கலரில், எல்லா இடங்களிலும் மண் பிளந்து வெளியே வந்து கொண்டிருந்தது. நிறைய இடங்களில் ரஃப் பேட்ச் இருந்ததால், பவுலர்களுக்கு அது மிகச் சாதகமாக அமைந்தது. அது எங்கள் பணியை சுலபமாக்கியது’ என்று கூறியுள்ளார்.
இதனால் இரண்டாவது டெஸ்டுக்கான பிட்ச்சாவது தரமாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.