உலகம்
அமெரிக்காவின் ஒரு நகரத்துக்கே விஷம் வைக்க திட்டம்.. கடைசி நொடியில் நிறுத்தப்பட்ட ஹேக்கரின் முயற்சி.. பகீர் தகவல்கள்!
புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர் நகரம். அங்கிருக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த ஹேக்கிங் முயற்சி நடைபெற்றுள்ளது.
சுமார் 15 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு செல்லும் குடிநீரில் வழக்கமாக கலப்பதை விட 100 மடங்கு அதிகமான அளவு சோடியம் ஹைட்ராக்சைடு அமிலத்தை கலக்கும் முயற்சி அங்கிருக்கும் மேற்பார்வையாளர் ஒருவர் கவனித்ததால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் திரவ வடிகால் கிளீனர்களில் சோடியம் ஹைட்ராக்சைடு முக்கிய மூலப்பொருள். நீர் அமிலத்தன்மையை நிர்வகிக்கவும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீரில் இருக்கும் உலோகங்களைத் தவிர்க்கவும் இது மிகச் சிறிய அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள கணினியை யாரோ தொலைவில் இருந்து ஹேக் செய்து இயக்கிக் கொண்டிருப்பதை கண்டறிந்தார். கணினியில் உள்ள கர்சரை சிறிது நேரம் அங்கும் இங்கும் நகர்த்துவதையும் கவனித்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சோடியம் ஹைட்ராக்சைட்டின் அளவை அதிகரிக்கும் மென்பொருளை திறந்து அதற்கான அளவை அதிகரிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் ஆலை ஆபரேட்டர் உடனடியாக தலையிட்டு சோடியம் ஹைட்ராக்சைடு அளவை மாற்றினார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் பாப் குவல்டீரி, சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளீடு கொடுக்கும் அளவை ஒரு மில்லியனுக்கு 100 பகுதிகளுக்கு பதிலாக 11,100 என்கிற அளவில் அதிகரிக்க அந்த ஹேக்கர் முயற்சித்துள்ளார். இது வழக்கமான அளவை விட 100 மடங்கு அதிகமாகும்.
இது வெளிப்படையான குறிப்பிடத்தக்க மற்றும் ஆபத்தான அளவீடாகும். அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. நீர் அமைப்புகள், நாட்டின் பிற பொது பயன்பாட்டு அமைப்புகளைப் போலவே, முக்கியமான உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் பொதுபாதுகாப்பை சீர்குலைக்க நினைப்பவர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளாக உள்ளன.
இந்த தகவல் வெளியானதும் ஓல்ட்ஸ்மாரில் உள்ள அதிகாரிகள் உடனடியாக கணினியை தொலைவில் இருந்து இயக்குவதற்கான வசதியை துண்டித்தனர். மேலும் மற்ற நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அரசாங்கங்களின் கணினி உள்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படாததால் அதை முறையாக பராமரிக்காமல் ஹேக்கர்களால் நகராட்சி நீர் மற்றும் பிற அமைப்புகளை எளிதில் குறிவைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இக்காலகட்டங்களில் தொழில்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படுவதால் இது போன்று தொலைவில் இருந்து அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என டிராகோஸ் செக்யூரிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் எம் லீ தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கும் குற்றவாளிகள் இனிவரும் காலங்களில் மேலும் பல மாநிலங்களில் குறிவைப்பதையும் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம் என்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உள்நாட்டை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டினரா என்பது குறித்து எஃப்.பி.ஐ அதிகாரிகள், ரகசிய சேவை மற்றும் பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஆகியவை விசாரித்து வருகின்றன.