தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்ட ‘சின்னம்மா’..!?- யாரும் எதிர்பார்க்காத சசிகலா வைத்த ட்விஸ்டு!!!
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிமுகவினர் இடையே மட்டுமல்ல, மற்ற கட்சியினரிடையேயும் உள்ளது. நான்கு ஆண்டு கால சிறைவாசம், கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சசிகலா எப்படியும் அரசியிலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கம்-பேக் கொடுத்துள்ளது பரபரப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
எப்படியும் அடுத்ததாக அவர் தன்னுடைய நெருங்கிய தோழியாக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வார், அல்லது சென்னை, இராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவுடன், தான் தங்கியிருந்த போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்துக்குச் செல்வார் என்றெல்லாம் சலசலக்கப்பட்டது.
ஆனால், தற்போது சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது குறித்து வெளி வந்துள்ள தகவல், வேற லெவல் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்குச் செல்லும் முன், யாரை முதல்வர் ஆக்கினாரோ, யார் தற்போதுத் தனக்கு எதிரியாக இருக்கிறாரோ, அதே எடப்பாடி பழனிசாமியை சசிகலா சந்திக்க உள்ளாராம்.
இந்தச் சந்திப்பில் நிச்சயம் அரசியல் குறித்து பேசப்படும் என்றாலும், வெளிப்படையாக அதற்கானதாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார். அது குறித்து துக்கம் விசாரிக்கவே சசிகலா, முதல்வர் பழனிசாமியை சந்திப்பார் எனத் தகவல் தெரிந்த வட்டாரம் சொல்கிறது.
எடப்பாடி பழனிசாமி முகாமில், அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலர், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அது குறித்து வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள். இவை அனைத்தும் மீண்டும் அதிமுகவில் சசிகலா இணைவதற்கான நகர்வுகளாகவே தெரிகிறது.
இப்படியான சூழலில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க சசிகலா தரப்பு நேரம் கேட்டுள்ளதாக வந்துள்ள தகவல், அதிமுகவினர் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.