தமிழ்நாடு
அதிமுகவை கைப்பற்றுவீர்களா..? – நிருபரின் கேள்விக்க சசிகலாவின் பதில்
![sasikala return - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/sasikala-return.jpg)
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று பேசிய சசிகலா, ‘கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்.
அவசரமாக அம்மா நினைவிடம் மூடப்பட்டது எதை காட்டுகிறது என்பது மக்களுக்கு புரியும். தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன்.
நமது பொது எதிரியை ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். இதயதெய்வம் புரட்சித்தலைவியின் பிள்ளைகள் என்றும் எனக்கும் பிள்ளைகள் தான். புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு செயல்படடுவதே என் விருப்பம்’ எனக் கூறினார்.
பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த போது, ‘அதிமுகவை நீங்கள் கைப்பற்றுவீர்களா?’ எனக் கேட்கப்பட்ட போது, ‘கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போது விரிவாக பேசலாம்’ என்று பதில் அளித்தார்.