தமிழ்நாடு
சசிகலா சென்னை வருகை: காவல்துறையின் அடுக்கடுக்கான நிபந்தனைகள்!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார். அவருக்கு தமிழக எல்லையிலும் சென்னை வரும் வரையிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அமமுக கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மொத்தம் 52 இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சசிகலாவை வரவேற்பது குறித்தும் அவர் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்பது குறித்தும் ஒரு சில நிபந்தனைகளை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது உள்ள கோவிட்19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு 30(2) காவல் சட்டம் அமலில் உள்ளதால் கீழ் கண்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. திருமதி சசிகலா அவர்களின் வாகனத்திற்கு பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவ்வாறு வந்தால் அந்த வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும்.
2. திருமதி சசிகலா உள்பட யாரும் ஆகிய அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும்.
3. ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி, கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.
4. பட்டாசு வெடிப்பதற்கும், பேண்ட் வாத்தியங்கள் பயன்படுத்தவும் கண்டிப்பாக அனுமதி இல்லை. கொடி, தோரணங்கள், பேனர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனது உத்தரவில் அறிவித்துள்ளார்