கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு வாழ்த்து முதல் தனி ஒருவன் சச்சின் வரை.. சென்னையோட மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகள்
சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், கோலி – ரோஹித் மீண்டும் இணைந்த போட்டிகள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த தொடர் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய தொடரை போலவே நிச்சயம் பரபரப்புடன் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடர்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
துவண்டுபோன மக்களை மீட்டெடுத்த டெஸ்ட்:
மும்பை தாக்குதலுக்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் துவண்டு போய் இருந்த சமயத்தில் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் விஷயமாக அமைந்தது 2008-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியாவுக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 316 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எப்படியும் தோல்வி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் மீண்டு வந்த இந்திய அணியில், சச்சினின் சதம், ஷேவாக் மற்றும் யுவராஜ் கூட்டணியால் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வெற்றி பெற்றது.
மறக்க முடியாத தருணம்:
1999 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்போது கிரிக்கெட் உலகில் சிறந்த பவுலிங் படையை வைத்திருந்த பாகிஸ்தானுக்கு எதிராக தனி ஆளாக சச்சின் போராடியது இன்றளவும் வியக்கவைக்கும். 5 ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 270 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி ஏற்கனவே 87/5 என்கிற நிலையில் இருந்தது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தனி ஒருவனாக போராடி 273 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு பக்கத்தில் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
கடைசியாக இந்தியா வெற்றி பெற 16 ரன்கள் தேவைபட்டது, 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் சச்சின் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த நான்கு ரன்களில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதில் ஆச்சர்யம் கொடுக்க கூடிய விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷேவாக் அதிரடி:
2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் அந்த அணி அதிரடியாக விளையாடி 540 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், காலிஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை மீறி எப்படி இந்தியா ரன்கள் எடுக்க போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஷேவாக் விருந்து வைத்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த போட்டியில் தன்னுடைய இரண்டாவது முறையாக 300 ரன்களை எடுத்தார் ஷேவாக். அதுவும் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். மறுபக்கம் டிராவிட் தன் பங்கிற்கு சதம் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 627 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்தின் கடைசி போட்டி:
2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் இந்திய வருகை அந்த அணிக்கு நிச்சயம் மோசமான கனவாக தான் மாறியிருக்கும். முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்த ஒரு அணி இன்னிங்ஸ் தோல்வியடையுமா என்றால் இங்கிலாந்து நிகழ்த்தி காட்டியது. இந்திய அணியில் கருண் நாயர் 300 ரங்களும் கே.எல். ராகுல் 199 ரன்களும் அவர்களுக்கு பக்கமலமாக ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் அதிரடியினால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 759 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
வரலாற்றை மாற்றிய இந்திய அணி:
கிரிக்கெட் உலகின் ராஜாவாக ஆஸ்திரேலிய அணி வலம்வந்த சமயம், 2001 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும்,கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தனர். இதனால் சென்னையில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முதல் இன்னிங்சில் 501 ரன்கள் குவித்த இந்திய அணியால் இரண்டாவது இன்னிங்சில் வெற்றி பெற தேவைப்பட்ட 155 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து கடைசி நேரத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் 21ம் நூற்றாண்டில் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய ஜாம்பவான் வந்துவிட்டதை உலகிற்கு உணர்த்தியது.