தமிழ்நாடு
சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், அதிமுக என்னும் இயக்கம் எங்களிடம்தான் இருக்கிறது. தொண்டர்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தெரிவிக்கின்றனர். தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
ஏற்கனவே சசிகலா பொதுக்குழு மூலமாக நீக்கிவைக்கப்பட்டுவிட்டார். அவரிடமிருந்த பொறுப்புகளும் எடுக்கப்பட்டுவிட்டன. அவர் இங்கு அடிப்படை உறுப்பினரே கிடையாது என்றார். தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சியில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. நாங்களெல்லாம் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துவிட்டோம். இதில் சேராதவர்கள் கட்சியில் இல்லாதவர்கள். சசிகலா புதிய உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் கட்சியில் இல்லை என்றார்.