தமிழ்நாடு
‘ராஜமாதா’ சசிகலா 7 ஆம் தேதி தமிழகம் ரிட்டர்ன்ஸ்! – தினகரன் கொடுத்த கம்-பேக் பன்ச்
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தற்போது அவர் பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த வாரம் அவர் எப்படியும் தமிழகத்துக்கு வருவார் என்றும், அதற்கு அவரது ஆதரவாளர்கள் மிகப் பெரும் வரவேற்பைக் கொடுப்பாள்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மீண்டும் தமிழக அரசியலில் காலெடுத்து வைத்தால், அவர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று பரவலாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின் தமிழக வருகை குறித்து தினகரன், ‘சசிகலா வரும் 7 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழகம் வருகிறார். யார் தவறு செய்தார்கள், யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று காலம் பதில் சொல்லும்’ என்று பன்ச் கொடுத்து சூசகமாக பேசியுள்ளார்.
முன்னதாக சசிகலாவின் இணைப்பு குறித்தும், டிடிவி தினகரின் இணைப்பு குறித்தும் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘சசிகலா, அதிமுகவின் உறுப்பினரே இல்லை. அப்படிப்பட்டவரை எப்படி நாங்கள் மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை மறு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி சசிகலா, தன் உறுப்பினர் சேர்க்கையை மறு பதிவு செய்யவில்லை.
அதிமுக என்கிற கட்சியும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்று நினைத்தவர் தினகரன். அப்படிப்பட்ட ஒரு நபரை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கட்சியில் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி தினகரன், தான் செய்தது எல்லாம் தவறு. வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதம் கொடுத்தால், அந்த கடிதத்தின் மீது அதிமுக தலைமை முடிவெடுக்கும்’ என்று கூறினார். இதற்குத் தான் பன்ச் கொடுத்துப் பேசியுள்ளார் தினகரன்.